திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், காதல், சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்வதில் தமிழ்நாடு முழுவதும் பல பதிவாளர் அலுவலகங்களில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Continues below advertisement

தாய், தந்தை ஒப்புதல் கோரும் பதிவுத் துறை

தமிழ்நாடு அரசின் திருமண பதிவு சட்டம் 2009ன் படி திருமண பதிவிற்கு மூன்று சாட்சிகள் வேண்டும். அவர்கள் ரத்த உறவாகவோ அல்லது தாய், தந்தையாராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. முறையான ஆவணங்களோடு இந்திய குடிமக்களாக இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் காதல் திருமணமோ சாதி மறுப்பு திருமணமோ செய்துகொண்டு பதிவு செய்யச் செல்வோர்களிடம் தாய், தந்தையரின் ஒப்புதல் வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Continues below advertisement

பெரும்பாலான காதல் திருமணங்களும், சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்களும் பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே நடைபெற்று வரும் நிலையில், பதிவுத்துறை திருமணம் செய்வோரிடம் பெற்றோர்களின் சாட்சியத்தை கோருவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், காதல் திருமணம் செய்தவர்களும் சாதி, மத மறுப்பு திருமணம் செய்தவர்களும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியாமல் பல மாவட்டங்களில் தவித்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்க வழியை கண்டுபிடித்த ஊழியர்கள்

ஆணிற்கு 18 வயதும் பெண்ணிற்கு 21 வயதும் நிறைவடைந்தால் அவர்கள் இருவரும் சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் சொல்கிறது. அதற்கு பெற்றோர் சம்மதமோ, ரத்த உறவுகளின் அனுமதியோ தேவையில்லை. ஆனால், இப்படியான சட்டம் இருக்கும்போதே பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றோர்களை அழைத்து வாருங்கள் அப்போதுதான் திருமணம் பதிவு செய்ய முடியும் என்று  புதிய சட்டமிருப்பதாக சொல்லி, திருமணம் செய்தவர்களை அலைகழிக்கின்றனர் பதிவுத்துறை ஊழியர்கள். ஒரு கட்டத்தில் பெற்றோரின் அனுமதியை பெற முடியாமல் தவிப்போரிடம் பல சார் பதிவு அலுவலகங்களில் லஞ்சம் பெற்றுக்கொண்டு திருமணம் பதிவு செய்துத்தரப்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

 2017 சுற்றறிக்கையால் மீண்டும் சிக்கல் ?

கடந்த 2017ஆம் ஆண்டு பதிவுத் துறை சார்பில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், இந்து திருமணத்தை பதிவு செய்ய, மணமக்கள் தரப்பில் இருந்து அவர்களது பெற்றோர் அல்லது சாட்சியாளர்களின் ஒரிஜினல் அடையாள அட்டையை திருமண பதிவின்போது காண்பிக்க வேண்டும் என்றும் பெற்றோரின் பெயர், முகவரி ஆகியவற்றை சமர்பித்த ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே திருமண பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த சுற்றறிக்கையின்படி பெற்றோரின் அனுமதி கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லையென்றாலும் பெற்றோரின் ஆவணங்கள் இன்றி திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்ற நிலை அப்போது உருவானது.

கண்டனம் எழுந்தது சுற்றறிக்கையை திரும்ப பெற்ற பதிவு துறை

பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த சுற்றறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்படியான கண்டிப்பான அணுகுமுறைகளை பதிவுத் துறை பின்பற்றினால் அது சாதி, மத பேதங்களை கடந்த திருமணங்களுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்ற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனையடுத்து, பெற்றோரின் ஆவணங்கள் கட்டயமில்லை என்ற அறிவிப்பு வாய்மொழியாக விடுக்கப்பட்டு, காதல் திருமணங்களை போதிய சாட்சிகளோடு பதிவு செய்யலாம் என்று பதிவு துறை உத்தரவிட்டிருந்தது.

தொடரும் சிக்கல்

ஆனால், தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படியே சார் பதிவாளர் அலுவலகத்தில் இப்போதும் பெற்றோரை நேரில் வர வேண்டும் என்றும் அவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என்றும் பல பதிவாளர்கள் அலுவலகங்களில் காதல் திருமணம் செய்த மணமக்கள் கட்டயப்படுத்தப்படுகின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா த.வெ.க. அரசு ?

இந்நிலையில், பெற்றோர் நேரில் வர வேண்டும், அவர்களின் ஒரிஜினல் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே திருமண பதிவு செய்ய முடியும் என்ற வழிகாட்டுதல்களை உடனடியாக நீக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.