கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
சசிகலா ஆதரவாளர்கள் நிகழ்ச்சியில் வழங்கிய லட்டில் கண்ணாடி துகள்கள் – உணவுத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.

லட்டில் கண்ணாடி தூள் இருந்தது குறித்து, சம்மந்தப்பட்ட பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் உணவுத்துறை அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.
சசிகலா ஆதரவாளர்கள் புதிய கட்சி அலுவலகம் திறப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் புதிய கட்சி அலுவலகத்தை இன்று உடைகுளம் பகுதியில் திறந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பாக, லட்டு வழங்கப்பட்டது. அந்த லட்டுகளை சாப்பிடும் போது, ஒருவருக்கு அதில் கண்ணாடி துகள்கள் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த லட்டு எங்கு வாங்கப்பட்டது என்று விசாரித்து, சம்பவம் குறித்து உணவுத்துறை அதிகாரி சிவகுமாரிடம் தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது தகவலை தொடர்ந்து உணவுத்துறை அதிகாரி சிவகுமார் சம்பந்தப்பட்ட தனியார் பேக்கரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, லட்டு தயாரிக்க பயன்படுத்திய சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருட்களில் இருந்து இது ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், தயாரிப்பு அல்லது கையாளும் செயல்முறைகளில் ஏற்பட்ட தவறுகளாலும் இதுபோன்ற நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதுகுறித்து அந்த பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் உணவுத்துறை அதிகாரி சிவகுமார் தெரிவித்தார். மானாமதுரையில் பிரபலமான பேக்கரியில் வாங்கிய லட்டில் கண்ணாடி துகள்கள் இருந்தது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் அல்லது பொதுமக்கள் இதனை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு போன்ற ஆபத்துகள் கூட ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடங்களில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















