கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும்  ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பம் கொண்ட ஆக்சிஜன் முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் தற்போது முகக்கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் முகக்கவசங்கள் அணிவதன் மூலம் நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு காற்றையே திரும்ப சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கொரோனா நோய் தொற்று இருப்பவர்களுக்கு வெண்ட்டிலேட்டர் பயன்பாடு அதிக அளவில் தேவைப்படுகிறது. கொரோனா நோய்தொற்று இருப்பவர்கள் மூச்சுத் திணறல் ஏற்படுவதன் மூலமாகவே உயிரிழப்பு ஏற்படுகிறது. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தற்போது அதிமுக கவசத்தை நானோ டெக்னாலஜி கொண்டு உருவாக்கியுள்ளார்.


நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் முக கவசத்தை பற்றி பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கூறும்போது, நானோ தொழில்நுட்பம் கொண்ட முகக்கவசம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நானோ தொழில்நுட்பம் மூலம் நாம் சுவாசிக்கும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஆக்சிஜன் உருவாக்கி நமக்கு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதனின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆக்சிஜன் அளவு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு தரும்படியான தொழில்நுட்பத்தை இந்த உருவாக்கத்தில் சேர்த்துள்ளோம்.


இந்தக் கண்டுபிடிப்பு ஆஸ்துமா நோயாளிகள், சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் ஐசியு இருக்கும் நோயாளிகளுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்து விற்பனைக்கு வரும்பொழுது சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய முகக்கவசத்தின் விலை ரூ. 500 ஆகவும், சென்சார் தொழில்நுட்பம் இல்லாமல் 20.9% முதல் 33% வரை ஆக்சிசன் தரக்கூடிய முகக்கவசம் ரூ.100 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த உருவாக்கம் மலைப்பகுதிகளில் வேலை செய்யும் ராணுவ வீரர்களுக்கு உபயோகமாக இருக்கும், இந்த கண்டுபிடிப்பு முகக்கவசம் அளவில் நிற்காமல் தீபாவளி சமயங்களில் துணிக்கடைகள் மற்றும் கூட்டங்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் விமானங்கள், ரயில் பெட்டிகள் ஆகிய இடங்களில் பேணல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த தொழில்நுட்பத்தை தருவதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரியான அளவில் கிடைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும். இந்த முகக்கவசம் தற்போது தயாராகி உள்ளது, முகக்கவசம் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் எதுவும் தயாராக இருந்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வரும் என பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.