சி.பி.ஐ., அதிகாரிகளிடம் நடந்ததை கூறியுள்ளேன், என்னை பற்றி உண்மையை சொல்லாமல் தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பகிர்கிறார்கள் - நிகிதா பேச்சு.

சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த நிகிதா
 
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக பார்க்கப்படுபவர் நிகிதா. மடப்புரம் கோயிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் DSP மோஹித்குமார் தலைமையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் நிகிதா மற்றும் அவரது தாயாருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். இதில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக  6 மணி நேரத்திற்கும் மேலாக நிகிதா மற்றும் அவரது தாயாரிடம்  தீவிர விசாரணை நடத்தினர்.
 
நிகிதாவிடம் நடைபெற்ற விசாரணை
 
இதில் கடந்த மாதம் ஜூன் 27- ஆம் தேதியன்று நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்,
 மருத்துவமனைக்கு சென்றார்களா? நகையை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்கள். என்னென்ன வகையிலான நகைகள், நகைக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம், அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், ஜூன் 27 ஆம் தேதி காலையில் கோயிலில் நடைபெற்ற சம்பவம், மாலையில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்து சென்றபோது நிகிதாவும், தாயாரும் காவல்நிலையத்தில் நடந்தவை குறித்தும், இரவில் திருப்புவனம் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்தது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, நிகிதாவிற்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
 
அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்குப் பின் நிகிதா
 
ஆறு மணி நேரம் விசாரணை முடிவடைந்து புறப்பட்ட பேராசிரியர் நிகிதா பேசும் போது...,” சி.பி.ஐ.,யிடம் உண்மையை சொல்லி உள்ளேன். எங்களை பற்றி யூடியூப்பில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் வெறும் புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது. அஜித்குமார் இறந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். நாள்தோறும் அழுது கொண்டுள்ளேன். சிபிஐயிடம் எல்லாமே சொல்லிவிட்டேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை. வேதனையாக உள்ளது. வேண்டும் என்றே.. சாக வேண்டும் எனவா நினைப்போம். அஜித்குமார் மரணத்தால் நானும் வேதனையில் தான் உள்ளேன். சாப்பிட முடியவில்லை. காய்கறி வாங்க பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்ல முடியவில்லை. ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது” என கூறிச்சென்றார்.