High Court Order: சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்ன தெரியுமா.?

யூடியூபர் சவுக்கு சங்கர், தன்னுடைய நிறுவனத்தின் செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது, சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், புலனாய்வு விசாரணை முடிவடைந்த வழக்குகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சவுக்கு மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகக் கூறி, சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது பதில் அளிக்குமாறு, தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அவர்கள் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவில் சவுக்கு சங்கர் கூறியுள்ளது என்ன.?
சவுக்கு சங்கர் உயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை காவல் ஆணையர் அருண் தங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
காவல்துறை அட்டூழியங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆணையர் அருண் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது யூடியூப் சேனல் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதாக மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தங்களது குழுவினர் கும்பமேளா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய உத்தரப்பிரதேசம் சென்றபோது, தெலங்கானா காவல்துறையினர் தங்களை வழிமறித்து, 2 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்ததுடன், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாததால் 1000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் கூறியுள்ள சவுக்கு சங்கர், சென்னை காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே இத்தகைய தொல்லை தங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
“உள்துறை செயலாளரிடம் புகார்“
சென்னை காவல்துறையினர் தனது நடமாட்டத்தை கண்காணித்து துன்புறுத்துவது தொடர்பாக, உள்துறை செயலாளருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாக கூறியுள்ள சங்கர், மே மாதம், சிறிய குற்றங்களுக்காக தனது ஒளிப்பதிவாளர் மற்றும் காட்சி எடிட்டருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மே மாதமே உள்துறை செயலாளருக்கு இரண்டாவது புகார் அனுப்பியதாகவும், இதேபோல், ஜூன் மாதத்தில் டிஜிபி-க்கும் புகார் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனது நிறுவனம் செயல்படுவதில் தலையிடுவதை தடுக்கவும், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிட என்றும் தனது மனுவில் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்திருந்தார்.
உள்துறை சார்பில் பதில்
இந்த வழக்கின் விசாரணையின்போது, சவுக்கு சங்கர் அளித்த புகார்கள் 2013 சட்டத்தின் வரம்பிற்குள் கண்டிப்பாக வராது என்று உள்துறை செயலாளரின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதோடு, 2 வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் மூலம் அனைத்து சமர்ப்பிப்புகளையும் எழுத்துப் பூர்வமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உள்ள குற்றவியல் வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் தரப்பை விமர்சித்த நீதிபதி
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் தரப்பை விமர்சித்த நீதிபதி, கிரிமினல் வழக்குகளில் பரபரப்புக்காக சிலர் இணைய ஊடகத்தில் விசாரணை நடத்துகிறார்கள் என்றும், வழக்க விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போதே, அதைப்பற்றி தனியாக அவர்களே விசாரணை, விவாதங்களை நடத்துகிறார்கள் என்றும் கூறினார்.
மேலும், அந்தந்த வழக்குகளின் முடிவுகளை பார்க்காமல், வழக்குகளை கையாள்வது குறித்து, காவலதுறைக்கும், நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டு, அறிவுரை சொல்லும் அளவிற்கு சிலர் செல்வதாகவும் நீதிபதி சாடினார்.
பத்திரிகையாளர்கள் அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், நாடடின் ஒவ்வொரு நிறுவத்தின் மீதும் ஆரம்பகட்ட விசாரணையின்போதே சேற்றை வாரி இறைக்கக் கூடாது என்றும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.
மேலும், அந்த சட்டப்பிரிவு ஒரு ஆயுதம் என்று தெரிவித்த நீதிபதி, நல்ல காரணங்களுக்காக அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டுவதற்காக எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு சில பத்திரிகையாளர்கள் மக்களை மிரட்டுவது ஒரு கசப்பான உண்மை என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், அவ்வாறு செய்து, மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





















