ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மலை கிராமமாக அமைந்துள்ளது. கடம்பூர் மலை கிராமம் என்பதால் அப்பகுதியில் இருந்து யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனச்சாலை வழியாக 18 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் குன்றி மலைப் பகுதிக்கு சென்று சேரலாம். போக்குவரத்து வசதி குறைவான குன்றி மலைப் பகுதியில் பெரிய குன்றி, சின்ன குன்றி, அணில் நத்தம், குஜ்ஜம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இங்கு அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 



இந்த மலைப்பகுதியில் உள்ள 10 கிராமங்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து வசதி குறைவான இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் நடமாடும் வனச்சாலையில் பயணிப்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ள நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவோர் கடம்பூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குன்றி மலைப்பகுதியில் உள்ள பத்து மலை கிராமங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என மலை கிராம மக்கள் ஈரோட்டில் உள்ள உணர்வுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சின்னத்திரை நடிகர் விஜய் டிவி பாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குன்றி மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களின் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி ஈரோட்டில் உள்ள உணர்வுகள் அமைப்பிடம் ஒப்படைத்தார். 



இதை தொடர்ந்து இந்த ஆம்புலன்ஸ் வாகனம் தற்போது குன்றி மலைப்பகுதியில் உள்ள மலை கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியுள்ளது. சின்னத்திரை நடிகர் விஜய் டிவி பாலா இலவசமாக வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் குன்றி மலைப் பகுதிக்கு வந்த போது மலை கிராம பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளான பீனாட்சி வாத்தியம் வாசித்தபடி ஆரவாரத்துடன் ஆம்புலன்ஸை வரவேற்றனர். மேலும் மலை கிராம பெண்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பு பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகன ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பேசிய உணர்வுகள் அமைப்பு நிர்வாகி மக்கள் ராஜன் மலை கிராமங்களுக்கு சின்னத்திரை நடிகர் விஜய் டிவி பாலா வழங்கிய ஆம்புலன்ஸை முறையாக பயன்படுத்தி மலை கிராம மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். குன்றி மலைப்பகுதியை பொருத்தவரையில் செல்போன் சேவை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு சேவை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் தற்போது மலை கிராம மக்களுக்காக அப்பகுதியிலேயே ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கப் பெற்றதால் குன்றி மலைப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.