விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராம மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கையான பேருந்து வசதி இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக போக்குவரத்து இன்றி தவித்து வந்த அப்பகுதி விவசாயிகளும், பள்ளி மாணவர்களும் இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பேருந்து வசதி இல்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வந்தனர். குறிப்பாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாய இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தையும், சிரமத்தையும் எதிர்கொண்டனர். அதேபோல, வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கல்வி கற்பதில் பெரும் சிக்கல் நிலவி வந்தது.

Continues below advertisement

 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோவடி கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

அப்போது, விழாவில் பங்கேற்ற கிராம மக்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து, தங்கள் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினையான பேருந்து வசதி குறித்து அவரிடம் எடுத்துக் கூறினர். மேலும், கோவடி கிராமத்திற்கு உடனடியாகப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் அளித்தனர்.

அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர் சக்திவேல், உடனடியாக அந்த மனுவை எடுத்துக்கொண்டு சென்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார். கோவடி கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் சிரமங்களை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்து, உடனடியாகப் பேருந்து இயக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போக்குவரத்துத் துறையின் துரித நடவடிக்கையால், இன்று முதல் கோவடி கிராமத்தில் இருந்து திண்டிவனத்திற்குப் புதிய பேருந்து சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலை இயக்கப்பட்ட முதல் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகளும், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் திண்டிவனத்திற்குப் பயணம் செய்தனர். 10 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு தங்கள் கிராமத்திற்குப் பேருந்து வந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், கிராம மக்கள் அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.