ஜாமீனில் எடுக்க மனைவி முயற்சி இல்லை
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகராஜன் (எ) கருவாயன் ( வயது 29 ) இவரது மனைவி 25 வயதுடைய பாண்டிச் செல்வி. இவர்களுக்கு யோகமித்ரன் ( வயது 6 ) , தீனா ( வயது 3 ) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
யோகராஜன் மீது திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து , கடந்த ஆண்டு அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் , தன்னை ஜாமீனில் எடுக்க மனைவி பாண்டிச் செல்வி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் , தனது பெற்றோர்களே அதற்காக ஓடினார்கள் என்றும் யோகராஜன் மனக் கசப்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆண்டு சிறை வாசத்தை முடித்து சிறையிலிருந்து வெளியே வந்த யோகராஜன் , சொட்டதட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
" நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா "
வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த யோகராஜன் "நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா " என கேட்டு வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி பாண்டிச் செல்வியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயை தந்தை அரிவாளால் வெட்டியதை கண்டு குழந்தைகள் அலறி அழுதுள்ளனர்.
அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், யோகராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழடி காவல் துறையினர் , பாண்டிச் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் மற்றும் கீழடி காவல் ஆய்வாளர் மயில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மனைவியைக் கொலை செய்து விட்டு
தப்பியோடிய யோகராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே நடந்த இந்த கொடூரக் கொலை , கீழடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
