கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாந்தூர் கிராமத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் மக்கள் வராமல் முடிக்கவைக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்த பின்னர், மீண்டும், சிறப்பு கிராம சபைக்கூட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலையில், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கோடாந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களும், மக்களும் கலந்து கொண்டனர்.


 


 




இந்நிலையில், கிராம பஞ்சாயத்திற்கு தேவையான நோட்டிஸ்கள் அடிக்கப்பட்டதற்கும், பொருட்கள் வாங்கப்பட்டதற்கும் எந்த ஒரு டெண்டர் ஒப்பந்தப்புள்ளி வைக்காமல், பல லட்சம் ரூபாய் கையாடல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பில்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பிரிண்டிங் பிரஸ்களும் இல்லை, கடைகளும் இல்லை, தவறான முகவரி மற்றும் போலியான பில்கள் கொடுத்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் பஞ்சாயத்து நிர்வாகம் மூடி மறைப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். மேலும், சரியான நடவடிக்கையும், முறையான தகவல்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதற்கிணங்க, பின்னர் அங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கலைந்து சென்றனர்.


 


 




ஏற்கனவே பஞ்சாயத்து கிராம சபைக்கூட்டத்தில் ஏராளமான கோரிக்கைகள் எழும், அல்லது சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவர். ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக ஏராளமான திட்டங்கள் மற்றும் புதிய பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்காமல், பஞ்சாயத்து தலைவரும், துணைத்தலைவரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதையும் அதில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதையும் ஆதாரப்பூர்வமாக சமூக நல ஆர்வலர் மொய்ஞானமூர்த்தி என்ற ஒருவர் வெளியிட்ட ஆதாரங்கள், பஞ்சாயத்திற்கே, பஞ்சாயத்து வைக்கும் செயலாக உள்ளது.