”புதிதாக ஆரம்பிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், திமுகதான் எங்களுக்கு போட்டி என்று கூறிக்கொண்டு மக்களிடம் தங்களது இருப்பை காட்டிக் கொள்கின்றனர். 2026-ல் மீண்டும் ஸ்டாலினே முதல்வர், திமுக பலமான இயக்கம்" என்று விஜய் குறித்த கேள்விக்கு முன்னாள அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.

Continues below advertisement

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா ஆவணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் புகலூர் நகராட்சியில் மழை அடிவாரத்தில் குடியிருந்த 414 பயனாளிகளுக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தும் வீட்டுமனை பட்டாக்கள் இல்லாத பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று முதலமைச்சரின் சிறப்பு நேர்வின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஈரோடு பிரச்சாரத்தில் திமுகதான் தங்களுக்கு எதிரி என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு,

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போதும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர். வேறு யாரையும் தங்களுக்கு போட்டியாக சொல்வதில்லை. அந்த அளவிற்கு மக்களுடைய மனதில் நிலைத்திருக்க கூடிய இயக்கம் திமுக. திமுக நேர்மையான, மக்களுக்கான ஆட்சியை வழிநடத்தி வருகிறது. அதனால், திமுக தான் தங்களுக்கு போட்டி என்று அவர்கள் சொல்லி தங்களது இருப்பை மக்களிடத்தில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். 

2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார். இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். புதிய கட்சியாக இருக்கட்டும், பழைய கட்சியாக இருக்கட்டும், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கி உள்ளார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.

திமுக அரசை பொருத்தவரை மகளிர் உரிமைத் தொகை, விடுபட்டவர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். மேல்முறையீடு செய்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு முதல்வர் வாய்ப்பு வழங்குகிறார். வட மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக அரசு தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்தலுக்கு முன்பாக கொடுத்துவிட்டு, தேர்தல் முடிந்த பின் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பதுதான் நமது முதல்வரின் நோக்கம். அதுவும், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது. 2026 இல் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.