கரூர்: குளித்தலையில் சிறுமியை குழந்தை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே போத்த ராவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கருப்பையா. இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் மகளை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி போத்தராவுத்தன்பட்டி கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.


 




 


இந்நிலையில், சிறுமி கர்ப்பமானதால் பெற்றோர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.


 




அடுத்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் கொடுத்த புகாரின் படி குளித்தலை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, போத்தராவுத்தன்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி கருப்பையாவை கைது செய்தனர். பின்னர், அவரை கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.