தமிழகத்தில் பல்வேறு மத வழிபாடுகள் இருக்கும் நிலையில் பல்வேறு சூழ்நிலைகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ ஒற்றுமை என்ற நிலை ஓங்கி இருக்கும். குறிப்பாக ரம்ஜான் பண்டிகைக்கு ஏராளமான இந்து, கிறிஸ்தவ நண்பர்கள் இஸ்லாமிய நண்பர் வீட்டிற்குச் சென்று பிரியாணி சாப்பிடுவதும், கிறிஸ்துமஸ் விழாவில் ஏராளமான இந்து, முஸ்லீம் நண்பர்கள் வாழ்த்து பரிமாறி கொள்வதும், தைத்திருநாள் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு ஏராளமான கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பொது மக்கள் இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.


இந்த நிலையில், கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்திய சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. நட்புக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் கோவில் யாக பூஜையில் கலந்து கொண்டதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


 




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் ரூபாய் 6.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டுமான பணி தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதால் மார்க்கெட்டில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் இன்று யாக வேள்வி பூஜை நடைபெற்றது. யாகத்தை அனைத்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜு தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டனர். 


 




இந்த பூஜைக்கு கரூர் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அசோக்குமார் பல்வேறு நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக கரூரைச் சேர்ந்த ஹக்கீம் என்ற வியாபாரி ஒருவரும் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் அர்ச்சகர் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியது.


 




 


நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து அவரிடம் கேட்டபோது, நட்பின் பெயரிலும், மத நல்லிணக்கத்தின் பெயரிலும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.  ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.


 




கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்தியது இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண