கரூரில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் திடீர் சோதனை.


 



கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.



கரூர் மாவட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அமைச்சரின் நண்பர்கள் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி என்கின்ற மணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8.00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். 


 




குறிப்பாக, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி‌.எஸ் சங்கர் ஆனந்த் வீடு, அவரது கார் செட் மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்கின்ற மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவர் வீடு உள்ளிட்ட நேற்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


 




நேற்று 3 இடங்களில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள்  மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். இவர்களின் வீடுகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு இதே போல் வருமான வரித்துறையினர், அமலாக்க துறையினர் இரண்டு முறை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டனர்.


 


 




மாயனூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம் சி எஸ் சங்கர் ஆனந்த் (தாய்- தந்தையர்) குடியிருக்கும் வீட்டில் நேற்று காலை 09.00 மணிக்கு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொள்ள சென்ற போது வீட்டில் யாரும் இல்லாததால் சோதனை மேற்கொள்ள முடியவில்லை. நேற்று மதியம் 3 மணி வரை கதவை திறக்க யாரும் வராததால் அமலாக்கத் துறையினர் 5 பேர் காத்திருந்து சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள் நேரடியாக கரூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த எம். சி. எஸ் சங்கர் ஆனந்த் வீட்டில் கூடுதலாக சென்று சோதனை மேற்கொண்டனர்.


 




 


கரூரில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் நடத்திய சோதனை நிறைவு


 


கரூர் கோதை நகரில் நடைபெற்ற சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டில் மாலை 07.00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து 08.30 மணிக்கு கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. அந்த இரண்டு இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிய வருகிறது. இந்நிலையில்  இரவிலும் கரூர் 80 அடி சாலையில் அரசு ஒப்பந்ததாரர் எம். சி. எஸ் சங்கர் ஆனந்த் வீட்டில் சோதனை தொடர்ந்து நிலையில், நேற்று இரவு 10.00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. கரூரில் நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர் சோதனை முடித்து விட்டு சென்றனர்.


 


 





குறிப்பாக மூன்று இடங்களில் நடைபெற்று வந்த சோதனையின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எம். சி‌. எஸ் சங்கர் ஆனந்தம் இடம் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கு மீது சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என கூறியிருந்த நிலையில் இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நடைபெற்றதா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.