கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, சற்று அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,039 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரம் படி வினாடிக்கு, 9,459 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 8,339 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு  காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 676 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவு வினாடிக்கு, 433 கனஅடியாக இருந்தது. 


கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 374 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 88.46 அடியாக இருந்தது.


திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.43 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


குளித்தலை நகராட்சியில் பாசன வாய்க்கால் சீரமைக்க முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை


குளித்தலை நகராட்சியில் பாசன வாய்க்கால் சீரமைக்கவும், பாதாள சாக்கடை அமைக்கவும் காவேரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவரும் அன்பில் தர்மலிங்கம், வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வருமான ஜெயராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, அனைத்து நகரங்களிலும் "தூய்மையான சுற்றுச்சூழல்" ஏற்படுத்துவது என்பது தமிழ்நாடு அரசின் பிரதான திட்டம் ஆகும். குளித்தலை நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு நீர் மறுசுழற்சி மேலாண்மை திட்டத்தினையும் செயல்படுத்த வேண்டும்.




பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முடித்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்புகள் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில் தென்கரை வாய்க்காலில் இருந்து தென்கரை வாய்க்கால் 9 பாசன வாய்க்கால்கள் அல்லது கிளை நீர் வழிகள் குளித்தலை நகரத்திற்குள் பாய்ந்து செல்கின்றன. இந்த ஒன்பது பாசன வாய்க்கால்கள் பெரும்பாலும் இயக்கமில்லா பயன்பாடு உள்ளவைகளாகவும், வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளவைகளாகவும் உள்ளன. முன்பு ஓடைகள் கட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவு நீரை மேற்கண்ட ஏழு பாசன நீர் வழிகள் வடிய விடப்பட்டன. அவை நீரின் வேகத்தால் தயக்கமின்றி வெளியேற்றப்பட்டன. ஆனால் தற்போது குளித்தலை நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாலும், கழிவு நீரின் அளவு அதிகரித்து விட்டதாலும், வடிகாலாக இருந்த பாசன நீர் வழிகளில் தூர்படிந்து விட்டன. இதனால் பாசன நீரோட்டம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 603.71 ஏக்கர் நிலங்கள் பாசனம் இழந்து பல விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இந்த பாசன நீரோட்டம் பாதிக்கப்பட்டதுடன் குளித்தலை நகரம் கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி மையங்களாக செயல்பட்டு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சுகாதாரப் பொறியியல் தொழில்நுட்பத்துடன் ஏற்கனவே உள்ள கழிவு நீர் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்து கழிவு நீரை குறிப்பிட்ட இடங்களில் சேகரித்து மறுசுழற்சி செய்து பொதுமக்களின் சுகாதாரங்களை காத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


குளித்தலை நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு நீர் மறுசுழற்சி மேலாண்மை திட்டத்தினையும் செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முடித்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்புகள் ஏற்படுத்தவும், பாதாள சாக்கடை மற்றும் கசடு கழிவு மேலாண்மை திட்ட பராமரிப்புக்கென தேவையான எண்ணிக்கைகளில் நவீன உபகரணங்களை வாங்கவும் தக்க திட்டங்களை தமிழ்நாடு அரசின் வரும் 2023-2024 நிதியாண்டில் செயல்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோருக்கும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.