கரூர்: குளித்தலை அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி மண்பாண்டம் பானை கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங்காட்டுப்பட்டியில் விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 22 சென்ட் விவசாய நிலத்தில் கற்களை அகற்றியுள்ளனர். அப்போது பள்ளம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமிக்கு தகவல் அளித்தார்.
உடனே, அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விவசாயி இணைந்து இயந்திர உதவியுடன் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தில் முதுமக்கள் தாழி மண் பாண்டம் பானை இருந்தது. பானையின் உள்பகுதியில் மண் மட்டுமே இருந்தது.
இந்தத் தாழிகள் பொதுவாக கருவுற்ற தாயின் வயிற்றைப் போன்ற அகன்ற நடுப்பகுதியையும், தடிமனான வாய் பகுதியையும் கொண்டிருக்கின்றன. மனிதன் இறந்தவுடன் மீண்டும் தாயின் கருவறைக்கே செல்கிறான் என்ற ஆதிமனிதனின் நம்பிக்கையை இது காட்டுவதாக கூறப்படுகிறது
தமிழர்கள் வயதாகும் போது, அவர்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து வெளியேறியதாகவும், இறக்கும் போது உட்கார்ந்த நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினர். மேலும் நவீன பானைகளைப் போல் அல்லாமல்,பழங்கால பானைகள் மிகவும் தடினமாக இருந்ததாக தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து தாழி பானையை கைப்பற்றிய வருவாய்த்துறையினர் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
