நீச்சல் தெரியாமல் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க ஆற்றில் பயமின்றி குளிக்க வசதியாக தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


 




 


ஆற்றில் இறங்கி நீச்சல் தெரியாமல் உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் பிற மாவட்ட ஆற்றங்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல, பொதுமக்கள் பயமின்றி இறங்கி குளித்துச் செல்லும் வகையில் பாதுகாப்பு வசதி உருவாக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறு என இரண்டு ஆறுகள் செல்கிறது இந்த இரண்டு ஆறுகளும் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் இணைந்து ஒருமித்த காவிரி ஆக மாயனூர் வழியாக கொள்ளிடம் திருச்சி நோக்கி செல்கிறது. காவிரி ஆறு கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், நெரூர், வாங்கல், மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளின் வழியாக திருச்சி நோக்கி செல்கிறது. அமராவதி கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிபாளையம், கரூர் மாநகரம், புலியூர், மேலப்பாளையம், வழியாக திருமுக்கூடலூர் சென்று காவிரியில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் போது நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து இரண்டு ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பும் போதும் காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் போதும் காவிரியில் வெல்லம் வருகிறது.


கரூர் மாவட்டத்தில் இரண்டு ஆறுகள் பாய்ந்தாலும் ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்குச் சென்று நீச்சல் தெரியாமல் இறங்கும் நிகழ்வுகள் அமராவதி ஆற்றுப்பகுதியை விட காவிரி ஆற்றுப்பகுதியில் ஆன நெருூர் மாயனூர் போன்ற பகுதிகளில் தான் அதிக அளவு நடைபெறுகிறது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒருமுறை அமராவதி ஆறு செல்லும் செட்டுப்பாளையம் பகுதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர் அதற்குப் பிறகு பெரிய அளவில் அமராவதி ஆற்றுப்பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை ஆனால் காவிரி ஆற்றில் அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது மாயனூர் மற்றும் நெருர்ப்பகுதியில் நான்கு மாணவிகள் உட்பட ஐந்து பேர் ஆற்றில் இறங்கி சுழலில் சிக்கி இறந்துள்ளனர். இதனால் வரை கரூர் மாவட்ட காவிரி ஆற்றுப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


 




 


காவிரி ஆறு பயணிக்கும் நெரூர் மற்றும் மாயனூர் பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் யாரும் இங்கு இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பாதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இது பெரும்பாலும் யாரும் பின்பற்றாமல் இருப்பதே இது போன்ற உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணமாக விளங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. காவிரி ஆற்றுப்பகுதிகளான நெருர் மற்றும் மாயனூர் பகுதிகளில் தான் அதிக அளவு உயிரிழப்புகள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


 




 


ஆறுகளில் வெள்ளம் வரும் நாட்களில், அந்தந்த காவல்துறை சார்பில் ஆற்றுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, அதிகம் வெள்ளம் வரும் சமயங்களில் போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி, காவிரி என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியான பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே, பொதுமக்கள் பயமின்றி, பாதுகாப்புடன் இறங்கி குறித்துச் செல்லும் வகையில், குறிப்பிட்ட தூரம் வரை தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, தரப்பகுதியில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக, ஆலோசித்து, ஆற்றில் இறங்கி உயிரிழப்புகள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, இது போன்ற பணிகள் மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான இடங்களை தேர்வு செய்து, இது போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.