கரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு  பருவமழை 2022 தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்துதுறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித இழப்பீடுகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள், ஓடைகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கறைகளை பலப்படுத்திடவும், பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு மேற்கொள்ளவும், வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத்தடுப்புக்காக  மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியவாசியப்பொருட்களை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திடவும், மேலும் தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ளுதல், வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்ளை தேர்வு செய்து வைத்திடவும், கால்நடைகள் இழப்பீடுகள் ஏற்படாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திடவும், போன்றவைகளை தயார் செய்து வைத்துக்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


தொடர்ந்து தொற்று நோய் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ளுதல், மருத்துவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், போக்குவரத்து சரிசெய்தல், வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும்  பேரிடர் காலங்களில் தேவைப்படும் ஜே சி பி, ரம்பம், பொக்லைன் இயந்திரங்கள் இருப்பு வைத்துக்கொள்ளவும், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய ஊழியர்கள் வைத்துக்கொள்ளவும், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை முன்கூட்டியே தணிக்கை செய்து சரி செய்திடவும், வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியபடுத்துவதுடன் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


இவ்வாலோசனைக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மந்திரச்சலம், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டயுதாபாணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், பேரிடர் மேலாண்மை  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.