கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்   தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 


 




 


அனைந்திய நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாத்மா சாலைக்கு அருகில் உள்ள பாரதி சாலையில் ஜல்லி குவியலாக கொட்டப்பட்டுள்ளது. அவை சிதறி கிடப்பதால் அப்பகுதி கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலை பணியை விரைவாக முடிப்பது குறித்தும், காமராஜபுரம் வடக்கு செல்லும் சாலையில் ஒரு பகுதியில் அடிக்கடி குழி  வெட்டப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு சிரமமாகவும், சாலை சீராக இல்லாததால்  அச்சாலையினை செப்பனிட்டு சீர் செய்யவது குறித்தும், கரூர் காந்திகிராமம் அருகில் திருச்சி பிரதான சாலையில் வடக்குபாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும், கரூர் கருப்பாயி கோயில் தெரு சாலையில் இருந்த பள்ளம் சரி செய்யப்பட்டது. ஆனால் அப்பள்ளமானது முழுமையாக சரி செய்யாதால் மேற்படி இடமானது மேலும் பள்ளமாகி கொண்டே வருகின்றது. 


மேற்படி இடத்திற்கு சற்று மேல்பகுதியில் பெரிய பள்ளம் எந்த பராமரிப்பும் இல்லாமல் உள்ளதால், அவ்விரு பள்ளங்களை சரி செய்வது குறித்தும், திண்ணப்பா தியேட்டர் அருகில் செங்குந்தபுரம் 5-வது குறுக்கு சாலைக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் அதனை சீர் செய்யும்படி கோரப்பட்டுள்ளது. காந்திகிராமம் இரட்டை டேங்க் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மீண்டும் சாலையின் நடுவிலே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் இறக்கிவிடுமாறு இருக்கிறது. எனவே பேருந்து நிற்பதற்கு அடைக்கப்பட்டுள்ள இடத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும், குளித்தலை நகராட்சி தற்காலிக பேருந்து நிலையத்தில் முழுவதும் குண்டு குழியுமாக உள்ளதாகவும், மழை காலங்களில் மழை நீர் தேங்கி பேருந்துகள் செல்லும்போது பயணிகள் மீது மழை நீர் தெறிக்கிறது. 


 




 


எனவே நகராட்சி  நிர்வாகம் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் வரையில் தற்காலிக தரைதளம் அமைப்பது குறித்தும்,  ஏமூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து மாணவர்கள் தனியார் வேலைக்கு செல்பவர்கள் கரூருக்கு சென்று வருவதற்கு தற்போது இயங்கிவரும் பேருந்துகளின் மார்க்கத்தை மாற்றி வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும். பொது இடங்களில்;அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர தட்டிகள் / பிளக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை அகற்றுதல். குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளக்கோடுகள் மற்றும்  சாலைப்பணிகள் சரிவர பராமரிப்பு  மேற்கொள்ளாததால் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்து உயிரழப்புகளில் தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க  காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.


 




 


மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சந்திரசேகர், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், கிராமிய நாராயணன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.