கரூர் மாவட்டத்தில் 18% சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் சங்க தலைவர் வித்யாசாகர் கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் குறுநிதி நிறுவனங்கள் தங்கள் சேவைக்காக பெரும் வட்டி தொகைக்கு சேவை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீட்டு நிதி நிறுவனங்கள் அளிக்கும் சேவைக்கான ஊதியமாக பெறப்படும் கமிஷனுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இப்போது வரை அமலில் உள்ளது. இந்த 12 சதவீத வரியை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று சிட்பண்ட்ஸ்  சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் மத்திய அரசு இந்த 12 சதவீத சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சிட்பண்ட்ஸ் தொழில் முற்றிலும் பாதிப்படையும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 100 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செயல்படுகிறது. ஆண்டிற்கு குறைந்தது ரூ.100 கோடிக்கு பணம் கொடுக்கல், வாங்கல், சேமித்தல் என்ற வகையில் வர்த்தகத்தை நடத்துகின்றனர். சிட்பண்ட்ஸ் தொழில் சார்ந்து மட்டும் 20 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். 




புதிய வரி ஏற்றத்தால் சிட்பண்ட்ஸ் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும், சேமிப்பு குறையும். உரிய நேரத்தில் உரியவர்கள் பண தேவையை பெற இயலாத நிலை ஏற்படும். இதனால் சிறு, குறு தொழில் சார்ந்தவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். வெளியில் அதிக வட்டிக்கு பணம் பெற வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதிலிருந்து விடுபட மத்திய அரசு சேவைக்கு ஏற்கனவே விதித்துள்ள 12 சதவீத வரியை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் இப்போது ஏற்றுவதாக அறிவித்துள்ள கூடுதல் 6 சதவீத வரியையாவது ஏற்றாமல் விட வேண்டும் என்றார். 




இதில் பாதிக்கப்படபோவது வங்கிச் சேவை பெற முடியாமல் இருக்கும் சிறு தொழில் புரிவோர், புதிய தொழில் துவங்குபவர்கள் மற்றும் சொந்த தொழில் செய்பவர்கள் போன்ற நடுத்தர மக்கள். இவர்கள், வெளியில் ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அளவிலான வட்டிக்கு பணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். எனவே, சுலபமான, எளிதில் புரியக்கூடிய வெளிப்படை தன்மையுடைய திட்டங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும், தேவைப்படும்போது பணத்தை பெறுவதற்கும் உதவும் சீட்டு நிதியகங்கள் பெருக ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


கரூர் மாவட்ட பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் சங்க செயலாளர் பேங்க் சுப்ரமணியன், பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் வக்கீல் ராஜு, செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண