இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 12ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. தினந்தோறும் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பது பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 12ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் வேடநத்தம் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் மாணவி நேற்று முன்தினம் தேர்வு எழுதி விட்டு வந்த நிலையில் தனது வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள வயல்வெளி பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
ஆனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாகியும் மக்கள் வராததால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த ஊர் முழுக்க மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்காத நிலையில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வேடநத்தம் கிராமத்தின் காட்டு பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி வேடநத்தம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தினம் தினம் குழந்தைகள் முதல் முதிய பெண்மணிகள் வரையிலான பாலியல் ரீதியிலான தாக்குதலை தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மூலம் கட்டுப்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி., “விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட பதிவில், “மாணவி காணாமல் போனதும் குடும்பத்தினர் புகார் அளித்தும் குளத்தூர் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல்துறை அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















