காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
Kanchipuram Police Station: "காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்றாமல், புதிய காவல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது கவனத்தில் பெற்றுள்ளது."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரபுகளை மதிக்கும் வகையில், நூறாண்டு பழமையான மரங்களை வெட்டாமல் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையக் கட்டடம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் பழமையான விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இயங்கி வந்தது. சிதிலமடைந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ₹1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சுமார் 4,596 சதுர அடியில் இந்த கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டன.
பொதுவாக புதிய கட்டடங்கள்
பொதுவாக கட்டப்படும்போது இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்த காவல் நிலைய வளாகத்தைச் சுற்றி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் தந்து வரும் 10-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். மரங்களின் அமைப்பிற்கு ஏற்ப, வரைபடத்தில் சிறு மாற்றங்களைச் செய்து, ஒரு மரத்தைக் கூட சேதப்படுத்தாமல் வியக்கத்தக்க வகையில் இப்புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தொடக்கி வைப்பு
கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்காலிகமாக காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த காவல் நிலையம், இனி இந்த பசுமை சூழ்ந்த புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது
காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்
இந்தத் திறப்பு விழாவில் மற்றொரு சிறப்பம்சமாக, நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு அரங்கேறியது. வழக்கமாக உயர் அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் தொடக்கி வைப்பார்கள். ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஒரு முன்மாதிரியான முடிவை எடுத்தார்.
அந்த காவல் நிலையத்தில் நீண்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் தலைமை காவலர்களைக் கொண்டே ரிப்பன் வெட்டி நிலையத்தைத் தொடக்கி வைக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி, மூத்த காவலர்கள் இருவரும் ரிப்பன் வெட்டி நிலையத்திற்குள் நுழைந்தனர். அதிகாரிகளின் இந்தச் செயல் அடிமட்ட காவலர்களைக் கௌரவிக்கும் விதமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இயற்கையைப் பாதுகாப்பதிலும், பணியாளர்களை மதிப்பதிலும் இந்த புதிய காவல் நிலையம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.






















