சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்பிரகாஷ் உடல் உறுப்புகள் தானம், அரசு மரியாதை!
"உத்தரமேரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம், அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது."

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு அருகே விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சாலவாக்கம் ஒன்றியத்தில் எடமச்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (50) செங்கல்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு குடிநீர் கேன்கள் விற்பனை செய்து வந்தார். இவர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு மரியாதை
மூளைச்சாவு அடைந்த இவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கணையம் ஆகியன செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உத்தரமேரூர் வட்டாட்சியர் நடராஜன் காஞ்சிபுரம் மாவட் நிர்வாகம் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ க.சுந்தர், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத்.பா.கணேசன் ஆகியோரும் உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















