காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் டீ மற்றும் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். சிவகுமார் மற்றும் முருகன் ஆகிய இருவருக்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறி உள்ளது. இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி விசாரணை
வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கடந்த மாதம், காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதுவரை எதிரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கை விசாரித்தார். இது தொடர்பாக காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி, சங்கர் கணேஷ் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று சங்கர் கணேஷ் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதி மாலை 5 மணிக்குள், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால், டிஎஸ்பிஐ கைது செய்து சிறையில் அடிக்க நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அனுப்பி வைக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்தநிலையில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சங்கர் கணேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.பி., கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதன் பிறகு காஞ்சிபுரம் டிஎஸ்பி மீண்டும் பணியில் சேர்ந்தார்.
நீதிபதி இடமாற்றம்
இந்தநிலையில் காஞ்சிபுரம் நீதிபதி செம்மல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செம்மல் அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக சென்னை வணிகவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.