காஞ்சிபுரம் டவர் விவகாரம்: என் ஆபீஸ்லேயே டவர் இருக்கு - கலெக்டர் சொன்ன அதிரடி பதில்!
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் டவர் விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்."

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லப்பெருமாள் நகரில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் மக்கள் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் சார்பில் 5ஜி செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் டவர் அமைப்பதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியரிடம் குவிந்த புகார்கள்
இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து கோரிக்கை மனு அளித்தனர். செல்போன் டவர் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்துத் தங்கள் கவலைகளை அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
ஆட்சியரின் விளக்கம் ஏற்படுத்திய அதிர்ச்சி
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சினேகா, செல்போன் டவர்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவே ஏராளமான டவர்கள் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், "எனது அலுவலகத்தின் மாடியிலேயே செல்போன் டவர் உள்ளது; இருப்பினும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் தொலைத்தொடர்பு சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது" என்று விளக்கம் அளித்தார்.
அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு
ஆட்சியரின் இந்த விளக்கத்தால், மனு அளிக்கச் சென்ற படித்த பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று எதிர்பார்த்த இடத்தில், அதற்கு மாறான கருத்து தெரிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மக்கள், இந்தத் திட்டம் கைவிடப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















