Just In





மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகிப்பவர் காளியம்மாள்.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகிப்பவர் காளியம்மாள். இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார்.
சீமானின் தீவிர விசுவாசியாக இருந்த இவர், தற்சமயங்களில் சீமானின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார் என்ற செய்தி கூட பரவியது.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவும் அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமாரும் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக காளியம்மாள் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக நாம் தமிழர் கட்சி பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அழைப்பிதழில் வெறும் சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் காளியம்மாளும் மேடை ஏறுகிறார். மற்ற கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் கட்சி பெயரோடு, பொறுப்போடு அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் காளியம்மாள் பெயர் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காளியம்மாள் தரப்பிடம் கேட்டபோது கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி என்பதால் கட்சி பெயரை குறிப்பிடவில்லை என சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபொல் நாம் தமிழர் கட்சியில் நீடிக்கிறீர்களா இல்லையா என கேட்கப்பட்ட கேள்விக்கு எல்லாத்துக்கும் இன்று பதிலளிப்பேன் என காளியம்மாள் பதில் அளித்துள்ளார்.