Kalaignar Womens Assistance Registration:  தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான விண்ணப்பபதிவு முகாம்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்றன. இதனை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மகளிரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் அறிவுருத்தியிருந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனையும் நடத்தினார். 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வரை பயன் பெறுவார்கள் என அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஒரு கோடி மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது  ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.


முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே அதற்காக, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், முகாம் நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் விண்ணப்பங்களையும் நியாவிலைக்கடை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்நிலையில்  தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் பயனாளர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர், திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் செயலாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளனர்.