தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது  நேற்று மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில்  நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலியர்  புகழ்வாசுகி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது  மருத்துவமனைக்கு ஜெயராஜை அழைத்து வரும்போது  உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக சாட்சியம்  கூறினார்.

 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் ஆஜராகி சாட்சியம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 









தனியார் பள்ளிகளில்  நெருக்கடியாக கட்டிடங்கள் கட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளில் மட்டும் தன் நிலைப்பாட்டை மாற்றுவது எப்படி? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

 

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச்சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப்பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது.  இந்த நிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,  மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவற்றை அரசாங்கம் கட்டியது. இதனால் தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் தான் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் சுருங்கியதால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

 

இதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அந்த கட்டிடங்கள்  கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும். எனவே நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தனியார் பள்ளிகளில் இது போல நெருக்கடியாக கட்டிடங்கள் கட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளில் மட்டும் தன் நிலைப்பாட்டை மாற்றுவது எப்படி? என கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுவரை நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.