அமைதியாக போராடிய இஸ்கான் துறவியை கைது செய்வதா? சத்குரு கடும் கண்டனம்

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்மோய் கிருஷ்ண பிரபு என்ற இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதற்கு சத்குரு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,’மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை ஜனநாயக நாடுகளின் வழி அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

மோசமாக உள்ளது:

சத்குருவின் எக்ஸ் பதிவில், ‘ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை பார்க்க மோசமானதாக உள்ளது. சுதந்திரமான ஜனநாயகத்தின் மதிப்புகளை புரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்தவிதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல.

துரதிருஷ்டவசமாக, நமது அண்டை நாடு ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகி விட்டது. அனைத்து குடிமக்களுக்கும் தேவையான உரிமைகள் மற்றும் அவரவர் தேவை மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புடன் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டினை கட்டமைப்பது ஒவ்வொரு வங்கதேச குடிமகனின் பொறுப்பாகும்.’ எனக் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் மத சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை சம்பவங்களை எதிர்த்தும், அனைவரும் சமய உரிமையோடு வாழ தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  

பாதுகாப்பது நம் பொறுப்பு:

அந்த வகையில் இது குறித்து முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சத்குரு, “இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு" எனக் கூறி இருந்தார். 

மேலும் இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் "நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்" எனப் பதிவிட்டு இருந்தார்.

பாதுகாப்பு தேவை:

வங்கதேசம் முழுவதும் நடைபெற்று வரும் கும்பல் வன்முறை, தீ வைப்பு, இந்து கோவில்கள் தகர்ப்பு மற்றும் இழிவுபடுத்தும் சம்பவங்கள், அமைப்பு ரீதியாக ஓரங்கட்டப்படுதல் போன்றவை மனிதாபிமான பிரச்சனை மற்றும் ஜனநாயக மதிப்புகள் முற்றிலும் சிதைந்து வருவதை காட்டுவதாக சத்குரு கூறியுள்ளார். 

அங்கு சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தல், இடப்பெயர்வு மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. திருவிழாக்கள் மற்றும் மதக் கூட்டங்கள் வன்முறைக்கு இலக்காகிவிட்டதால், பலர் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக கடைப்பிடிக்க பயப்படுகிறார்கள். 

இந்த அராஜக செயல்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டிருப்பது, வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையற்ற சூழலையும், அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையின் அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola