புதுச்சேரி: புதுச்சேரியில் மாடலிங் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் சமூக வலைதளங்கள் வாயிலாக மாடலிங் வேலை மற்றும் ஆன்லைன் வர்த்தக விளம்பரங்களை காட்டி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த இரு வேறு சம்பவங்களில் ஒரு பெண் உட்பட இருவர் தங்களது பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடலிங் கனவில் விழுந்த மண்
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தின் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அந்த மர்ம நபர், இளம்பெண்ணுக்குத் திரைத்துறை மற்றும் விளம்பரத்துறையில் 'மாடலிங்' வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய அந்தப் பெண், வேலைக்கான முன்பணம், பதிவுக்கட்டணம் என பல்வேறு காரணங்களுக்காக அந்த நபர் கேட்ட போதெல்லாம் பணத்தை அனுப்பியுள்ளார். பல தவணைகளாக மொத்தம் ரூ. 14 லட்சத்து ஆயிரத்து 600 வரை அந்த நபர் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்ததுடன், ஒரு கட்டத்தில் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ஏமாந்த நபர்
இதேபோல், புதுச்சேரி குண்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் (WhatsApp) குழுவில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 'பைபர்நெட்' (Fibernet) விற்பனை தொடர்பான கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து அவர் அந்த சேவையைப் பெற முயன்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டு முன்பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பி அவர் ரூ. 27,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார். ஆனால், பணம் செலுத்திய பிறகு சொன்னபடி உபகரணங்கள் வரவில்லை. அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் இணைப்பில் கிடைக்கவில்லை.
போலீசார் தீவிர விசாரணை
இந்த இரண்டு புகார்கள் குறித்தும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மர்ம நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஐபி (IP Address) முகவரிகளைக் கொண்டு தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
"சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களிடம் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலை வாய்ப்பு அல்லது அதீத லாபம் தரும் விளம்பரங்களைக் கண்டால் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே செயல்பட வேண்டும். சைபர் மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
