முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அச்சம்பவம் நடந்த மறுநாளான 2017 ஏப்ரல் 29 ஆம் தேதி கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து 2017 ஜீலை 3 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.




முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர்  கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் கூடுதல் விசாரணை செய்தனர்.


பின்னர் கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து கோடநாடு வழக்கு விசாரணையை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ், குற்றவாளிகளை கேரளாவிற்கு தப்பிக்க உதவியதாக கூறப்படும் கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜி ஆகியோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் தனிப்படை காவல் துறையினர் ஆய்வு நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது மற்றும் தினேஷ்குமார் தற்கொலை வழக்கை தனிப்படையினர் மறு விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.




கோடநாடு வழக்கின் மறு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தனிப்படையினர் உடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் அவசர ஆலோசணை நடத்தினார். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசணை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கில் சாட்சியாக உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், முக்கிய சாட்சியான காவலாளி கிருஷ்ணதாபாவை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இவ்வழக்கில் முக்கிய சாட்சியான நேபாளத்தை சேர்ந்த காவலாளி கிருஷ்ணதாபா, வழக்கு விசாரணையின் போது சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேபாளத்தில் இருந்து காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்த நிலையில், பின்னர் அவர் கோடநாட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் நேபாளத்திற்கு சென்று கிருஷ்ணதாபாவிடம் மறு விசாரணை செய்ய தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.