School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையல், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்ற தவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார்.
“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு“
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம், பள்ளிகள் திறப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலருந்து கோரிக்கை வந்ததாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அறிவியல்பூர்வமான சில விஷயங்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக, கோடை காலம் அந்த ஒரு வாரம் இருக்குமா, வெப்ப அலை இருக்குமா அல்லது பருவமழை தொடங்கிவிடுமா என்பது குறித்த கோப்புகளை கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த தகவல்கள் வந்த உடன், முதலமைச்சர் ஜேசப் விஜய்யிடம் அதை காண்பித்து ஆலோசனை செய்து, அதன் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
1-லிருந்து 3-ம் வகுப்பு வரை ஏற்கனவே ஜூன் 4-ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“போக்சோ குற்றங்கள் குறித்து புகார் அளிக்க பாடப் புத்தகத்திலேயே தொலைபேசி எண்“
பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதுகு குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஏதேனும் பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுக்கான விஷயங்கள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், அதை திறந்த உடனேயே, முதலில் புகார்களை பதிவுசெய்ய உதவும் இலவச தொலைபேசி எண்கள்(Toll Free Number) அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், போக்சோ குற்றங்கள், அந்த வழக்குகள் கையாளப்படும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களிலும், வகுப்பறைகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“காலை உணவு, மதிய உணவுத் திட்டங்கள் தொடரும்“
தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் அப்படியே தொடரும் என்று தெரிவித்த ராஜ்மோகன், அதை மீண்டும் ஆய்வு செய்து, இன்னும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், உணவின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், அதை தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, தற்போது வழக்கப்படும் தினசரி உணவுப் பட்டியல், மாணவர்களின் விருப்பங்களை அறிந்து, அதற்கேற்றார்போல் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“பள்ளிக்கல்வித்துறையில் இனி முறைகேடுகள் நடக்காது“
பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை, இனி மிகவும் நேர்மையான முறையில் செயல்படும் என்று கூறிய அமைச்சர் ராஜ்மோகன், யாரும் எங்கும் பணத்தை கொடுத்தோ அல்லது சிபாரிசை பயன்படுத்தியோ எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.
அப்படி ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, துறை ரீதியாக, சட்டத்திற்குட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















