கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் தனது வீட்டிற்கு இரண்டு சிறுமிகளை அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோயம்புத்தூரில் பிரபல மத போதகராக செயல்பட்டு வந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கடந்த மே  21ஆம் தேதி அன்று தனது வீட்டில் வைத்து இரு சிறுமிகளுக்குப்  பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்தனர். சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


தலைமறைவான ஜான் ஜெபராஜ்


சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், மத போதகர் ஜான் ஜெபராஜை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் தன் மீது வழக்குப் பதிவானதைத் தொடர்ந்து தலைமறைவானார். தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மூணாறில் ஜான் ஜெபராஜ் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கோவை போலீசார், அங்கேயே நேரில் சென்று ஜான் ஜெபராஜை கைது செய்தனர்.


கிறிஸ்துவ மதத்தை தவறான வழியில் போதித்து ஜான் ஜெபராஜ் பணம் சம்பாதிப்பதாகப் பலர் இவர் மீதும் குற்றம் சாட்டி வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளது பரப்பரப்பை கிளப்பி உள்ளது.