வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ), இந்திய கடலோர காவல்படையுடன் (ஐசிஜி) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், மாலத்தீவு நோக்கி சென்ற கப்பலில் இருந்து 33 ரூபாய் கோடி மதிப்புள்ள 29.954 கிலோ ஹாஷிஷ் (கஞ்சா) ஆயிலைக் கைப்பற்றியது.
நடுக்கடலில் அதிரடி காட்டிய கடலோர காவல்படை:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து பாறைகளை ஏற்றி கொண்டு விசைப்படகை இழுத்துச் செல்லும் இழுவைக் கப்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடுக்கடலில் இடைமறித்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது, கப்பலில் சோதனை நடத்தியபோது, கணிசமான அளவு ஹாஷிஷ் (கஞ்சா) ஆயிலை யாருக்கும் தெரியாமல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் உத்தரவின் பேரில், இந்திய கடலோர காவல்படை கடந்த மார்ச் 5ஆம் தேதி, கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் அந்த கப்பலை தடுத்து நிறுத்தினர்.
சிக்கியது கஞ்சா ஆயில்:
கடந்த மார்ச் 7ஆம் தேதி, தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அந்த கப்பல் மீண்டும் எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், போதைப்பொருளை கப்பலில் வைத்த நபருடன் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டார். கப்பலின் இருப்பிடத்தை கும்பலுடன் பகிர்ந்து கொள்வதில் ஈடுபட்டிருந்த குழு உறுப்பினரும் கப்பல் நிறுத்தப்பட்டதும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
கப்பலில் 29 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அடங்கிய இரண்டு பைகளில் உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டது. பாக்கெட்டுகள் பரிசோதிக்கப்பட்டதில், 'கருப்பு நிற திரவ பேஸ்ட் போன்ற பொருள்' இருப்பது கண்டறியப்பட்டது. இது, கள சோதனையில் 'ஹாஷிஷ் ஆயில்' எனத் தெரிய வந்தது.
சர்வதேச சந்தையில் ரூ 32.94 கோடி மதிப்புள்ள 29.954 கிலோ எடையுள்ள 29 பாக்கெட்டுகள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.