தேசிய சராசரி அளவை விட  அதிக அளவு மின் விநியோகம் செய்யும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்  பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின் விநியோகம் சராசரி அளவை விட அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார் மத்திய அமைச்சர். 


இது தொடர்பான செய்தி வெளியீட்டு குறிப்பில், “தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே சிங் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.


மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள் 11-5-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021 2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம். 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என்றும் மாண்புமிகு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.