60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!
"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பைக் திருட்டு சம்பவத்தின் பின்னணியில் காவலர்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது."

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக புதிய இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை மீட்டுத் தருமாறு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்களை அளித்தனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய கொள்ளையர்கள்
புகார்களின் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை போலீசார் விரிவாக ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. அந்த காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரத்பாபு (40) மற்றும் விமல்குமார் (31) ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திருடப்படும் புதிய இருசக்கர வாகனங்களை, அவர்கள் வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். ஒரு பைக்கை வெறும் 7,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்று, சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதை: காவலரின் கூட்டு
இந்த விசாரணையில் மிக முக்கிய திருப்பமாக, இவர்களின் திருட்டுத் தொழிலுக்குப் பின்னணியில் ஒரு போலீஸ்காரரே கைகோர்த்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கணியம்பாடி மேற்குளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பட்டாலியன் காவலர் மணிகண்டன் (32) என்பவருக்கு இந்த திருட்டு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவலர் மணிகண்டன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே வேலைப் பார்த்துக்கொண்டு, உள்ளூர் நிலவரங்களை வேவு பார்த்து இந்த திருட்டு கும்பலுக்கு ரகசியமாக உதவி செய்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை விற்று வரும் பணத்தில் அவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே கொள்ளைக் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 லாரிகளில் பறிமுதல் மற்றும் நீதிமன்றக் காவல்
குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், வேலூர் மாவட்டத்திற்கு விரைந்த போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டு வாகனங்களை மீட்டனர். மொத்தமாக 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, அவை வேலூரிலிருந்து 2 பெரிய லாரிகள் மூலம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, பைக் திருட்டில் ஈடுபட்ட சரத்பாபு, விமல்குமார் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த காவலர் மணிகண்டன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















