தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் மாறுபாடுகள் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மழை வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில், கீழம்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களுக்கு இரவு வரை எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று மாலை வெளியிட்ட சிறப்பு எச்சரிக்கை அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப் பொழிவின் காரணமாக சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதற்கும், சாலைகளில் வழுக்கும் தன்மை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Continues below advertisement

வரும் நாட்களில் வானிலை நிலவரம்

நாளை பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வானிலை நிலை வரும் ஜூலை 31-ம் தேதி வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை உயர்வு பற்றிய அறிவிப்பு

மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 29-ம் தேதி வரை சில இடங்களில் இயல்பு வெப்பநிலையை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.