அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்(Annapoorna Srinivasan) மன்னிப்பு கேட்டது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், ’’மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை’’ என்று பாஜக எம்எல்ஏ வானதி விளக்கம் அளித்துள்ளார்.


கோவையில் சிறு குறு தொழில் முனைவோர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் விதவிதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. ஜிஎஸ்டி போடுவதில் கணினியே திணறுகிறது.


வானதி கூட எங்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு, வரி குறித்து கேட்டிருக்கிறார்” என அமைச்சரிடம் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.


மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர்


இந்த நிலையில், என்று அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ‘’நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தான் கேள்வியை முன்வைத்தேன். அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை’' என்று கூறி இருந்தார். இதுதொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.


இதற்கு எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோர், கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து கோவையில், வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ’’தனது ஓட்டலில் ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னதுபோல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார்.


சீனிவாசன்தான் நேரம் கேட்டார்


அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்.’’ என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.