சில நாட்களாகவே நித்யானந்தாவை ஆளையே காணோம் என்று தேடிவந்தர்கள் பலர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வந்தன. சில நாட்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வராமல் இருந்த நிலையில் பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிட்டு நான் 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா. அவர் இறக்கவில்லை என்றும் சமாதியில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். பரமசிவனின் குரலாக சமாதியில் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு அவருக்கு எந்த நோயும் ஏற்படவில்லை என்றும், சுற்றி இருந்து பார்த்துக்கொள்ளும் மருத்துவர்களை மருத்துவர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டு, அவர்கள் அவருடைய பக்தர்கள் என்றும், அவருடைய உடலில் ஏற்படும் காஸ்மோஸ் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளவற்றை இங்கு மொழி பெயர்த்துள்ளோம்.



"பரமசிவனின் ஆசிகள்! என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம். சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். இதுவரை என்னை சுற்றியுள்ள, மக்கள், அவர்களது பெயர்கள், ஊர்கள், மற்றும் நினைவுகள் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் கைலாசத்தின் அதிர்வுகள் மனநிலையில் அதிகமாக உள்ளது. சந்தேகிப்பவர்கள், புகைப்படங்கள் போலியானவை என நீங்கள் உணர்ந்தாலும், திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள், நீங்கள் என்னைத் தெளிவாகப் பார்ப்பீர்கள்.


என்னைக் கண்காணித்து, ஆதரவு தந்து, உதவி செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. இன்னும் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் போன்றவர்கள். மனித உடல் மற்றும் மனதின் மீது சூப்பர் நனவின் தாக்கத்தைப் படிப்பதில் என்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் தவறாமல் நடக்கிறது, ஆனால் இன்னும் சாப்பிடுவதும் தூங்குவதும் தொடங்கவில்லை.



நித்ய பூஜைக்காக நான் சமாதியிலிருந்து வரும்போது மட்டும், ​​சில சமயங்களில் உங்கள் கருத்துகளைப் பார்த்து என் பதிலைத் தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி, நலம் பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை. இது உடலின் வழியாகச் செயல்படும் ஒரு காஸ்மோஸ் போன்றது. மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் இன்னும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை.


பரமசிவனின் இணையான பிரபஞ்சங்களை அனுபவிப்பதுதான் இது. பரமசிவன் இந்த உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு ஒரு ஸ்பீக்கர் அல்லது லவுட் ஸ்பீக்கராக என்னைப் பயன்படுத்துவதைப் போல் உணர்கிறேன். மனிதனாக இங்கு இருப்பதை விட கைலாசத்தில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்.


ஆனால் உங்கள் அனைவரிடமும் உள்ள அன்பு, என்னை இங்கு அழைத்து வந்து உங்களுடன் நேரம் செலவிட வைக்கிறது. என் பக்தர்களுக்கு சமாதி தோன்றும், பார்வை தரும், குணப்படுத்தும், பதிலளிக்கும். அது உடலை பயன்படுத்தி பதில் அளிப்பதைவிட, விரல்களால் டைப் செய்வதை விட எளிதாக இருக்கிறது. மேலும் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள். மகிழுங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள்!" என்று எழுதி உள்ளார்.