உரிமைத்தொகை ரூ.5 ஆயிரத்தை செலவு செய்ததால் மனைவி கோபம்.. கணவர் தற்கொலை!
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமுவுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ஈஸ்வரன் இந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் அவரது ஏடிஎம் சென்று எடுத்து செலவு செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகையை கணவர் செலவழித்ததால் மனைவி கோபமடைந்தார். இதனால் மனம் நொந்துபோன கணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 1.31 கோடி மகளிருக்கு இந்த உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதம் 15ம் தேதி வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் பிப்ரவரி 13ம் தேதி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கும் மாதம் ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் மொத்தமாக 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
விருதுநகரில் நேர்ந்த சோகம்
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திரா குடியிருப்பு அருகே இருக்கும் நெடுங்குளம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் தனது மனைவி ராமுவுடன் வசித்து வந்தார். இதனிடையே ராமுவுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ஈஸ்வரன் இந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் அவரது ஏடிஎம் சென்று எடுத்து செலவு செய்துள்ளார். இந்த உண்மை ராமுவுக்கு தெரிய வந்த நிலையில் அவர் ஈஸ்வரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இப்படி செய்ததால் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு ராமு சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஈஸ்வரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)























