தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய முயற்சியாக “பயணி குடிநீர்” வாட்டர் பாட்டில் விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா குடிநீர் திட்டம்
கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தபோது பல்வேறு விதமான திட்டங்கள் தொடங்கப்பட்டது. இதில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது அம்மா குடிநீர் திட்டம். தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2020 கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன் வரை நடைமுறையில் இருந்தது. ஆனால் உற்பத்திக் குறைவு காரணமாக 2021ல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசில் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் பேருந்து நிலையங்கள் அல்லது நிறுத்தங்களில் தனியார் வாட்டர் பாட்டிலை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். தண்ணீர் என்பது பயணத்தில் மிக முக்கியமான தேவை என்ற நிலையில் மீண்டும் அம்மா குடிநீர் போன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பயணி குடிநீர் திட்டம்
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளிலும் துரிதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10க்கு குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டமானது கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது தற்போது எஸ்இடிசி பேருந்துகளில் மட்டுமே வழங்கப்படும் நிலையில் விரைவில் அனைத்து பேருந்து நிலையங்கள், முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் கொண்டு வரப்படும் என கூறப்படும். இந்த பயணி குடிநீர் திட்டம் பயணிகளின் நலனில் இன்னொரு முக்கியமான முன்னெடுப்பு என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிச்சயம் இந்த திட்டம் அரசுக்கு வருவாயை அள்ளிக் கொடுக்கும் ஒரு மகத்தான திட்டம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
