தமிழகத்திலேயே முதல் முறையாக கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மூலிகை நீராவி மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்படவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது மேலும் தங்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூச்சுப்பயிற்சி, ஆவிபிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்


இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நேசக்கரம் பொதுநல அமைப்பு சார்பில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தலைமை மருத்துவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நீராவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தினசரி மாலை வேளைகளில் இரண்டு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் இந்த சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்படும்.நொச்சி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை, வேம்பு,உள்ளிட்ட மூலிகைகள் தினசரி ஒவ்வொன்றாக நீராவி மூலம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.


இதனை பயன்படுத்திக் கொண்டு கொரோனா நோயாளிகள் ஒவ்வொருவராக மாலை நேரங்களில்  மூலிகை நீராவி சிகிச்சை சமூக இடைவெளி கடைபிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும் நம் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு நீராவி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.