'தமிழகத்தில் கோவை, நீலகிரி தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 12; கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11; புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், பெருங்களூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய உள்ளதால், அம்மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளாவில் மீண்டும் கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்னிந்தியாவில், குறிப்பாக தெற்கு தமிழ்நாடு மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு மண்டலத்தில் உருவான சுழற்சி காரணமாக ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக, ஆகஸ்ட் 3 முதல் 7 வரை கேரளாவின் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆரஞ்சு எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக மிக கனமழை (115.6 mm முதல் 204.4 mm வரை) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.