தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது இன்று மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுகுறைந்து இன்று காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும். தென்மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மறு நாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 10ம் தேதியன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதேபோல் அடுத்து வரும் நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டம் உட்பட நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை மற்றும் நாளை மறு நாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி- இயல்பிலிருந்து சற்று குறைந்து இருக்கக்கூடும்.