பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான  H1N1 வைரஸின் திரிபான H3N2 வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி என்று நண்பர்களும் உறவினர்களும் சொல்வதைக் காண முடிகிறது. இந்த நிலையில்  H3N2 வைரஸின் அறிகுறிகள் என்ன, தடுப்பது எப்படி என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விரிவான தகவல்களைத் தெரிவித்து உள்ளார். 


அதில் கூறி இருப்பதாவது: 


’’இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. 


அறிகுறிகள் என்ன?


* அதீத காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்களுக்கு மேல்) 


* தொண்டை வலி 


* விடாத வறட்டு இருமல் 


* குமட்டல் / வாந்தி 


* உடல் வலி / சோர்வு 


* தலைவலி போன்றவை H3N2 வைரஸ் தொற்றின்  அறிகுறிகளாக இருக்கின்றன


ஐசிஎம்ஆர் ஆய்வுகளின்படி இந்த தொற்றினால் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு, குறிப்பாகக் குழந்தைகள் , முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு. 


அபாய அறிகுறிகள்


மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத் திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிரக் காய்ச்சல் , நெஞ்சுப் பகுதியில் வலி , எதையும் சாப்பிட முடியாத அளவு சுணங்கிக் கிடப்பது,  தலை சுற்றல், வலிப்பு  போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். 



என்ன செய்ய வேண்டும்?


* நோயாளிகள் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும். 


* 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 


* 90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும். 


* சுய மருத்துவம் ஆபத்தானது. 


* பொன்னான நேரத்தை சுய மருத்துவம் செய்து போக்குவது தவறான செயல் ஆகும். 


* குழந்தைகள் முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.


அடுத்த சில வாரங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?


* பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியோர்கள், குழந்தைகளை அத்தியாவசியம் இன்றி வெளியில் கூட்டமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது 


* அத்தியாவசியமற்ற பயணங்களை சற்று தள்ளிப் போடுவது சிறந்தது 


* பொது இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது  தொற்றுப் பரவலை தடுக்கும் சிறந்த நடைமுறை ஆகும். 


* தொற்று ஏற்பட்டு காய்ச்சலுடன் இருப்பவர், காய்ச்சல் குணமாகும் மட்டுமேனும் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டால் தொற்றுப் பரவலை தடுக்க இயலும் 


* கைகளை சோப் போட்டு  அடிக்கடி கழுவ வேண்டும். 


* எச்சிலைப் பொது இடங்களில் துப்பக் கூடாது. 


* ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை.



H3N2 வைரஸ்க்கு எதிராக வேலை செய்யும் வைரஸ் கொல்லி மருந்துகள் குறிப்பாக ஒசல்டாமிவிர் நம்மிடம் இருக்கிறது. எனினும் தீவிர நோய்  ஏற்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே வைரஸ் கொல்லி மருந்துகள் போதுமானது. சாதாரண தொற்று நிலையில் இருப்பவர்களுக்கு பன்றிகாய்ச்சல் எதிர்ப்பு வைரஸ் கொல்லி மருந்து தேவையில்லை. 


இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும்  ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 


தொற்றில் இருந்து மீள்வது எப்படி?


* காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.  


* மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


* குளிர்ந்த நீரால் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது


* நீர்ச் சத்து நிரம்பிய ஆகாரங்களை உட்கொள்ளுதல்


* ஓ.ஆர். எஸ் திரவத்தைப் பருகுதல்


* நல்ல ஓய்வு ஆகிய காரணிகள் இந்த தொற்றில் இருந்து மீள உதவும். 


 



மருத்துவர் ஃபரூக் அப்துல்லா


குழந்தைகள் முதியோர்கள் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு தொற்று அறிகுறிகளில் அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செயலில் இறங்கி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். 


பெரும்பான்மையினருக்கு சாதாரண, பருவ கால காய்ச்சலாகக் கடந்து செல்லும் தொற்று இது. இந்தக் காய்ச்சல் குறித்து அதிக அச்சம் தேவையில்லை. எனினும் எச்சரிக்கை தேவை’’. 


இவ்வாறு சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.