திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜக சொன்னால் அது மதவாதம்? சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவும், தவெகவும் சொன்னால் அது மதசார்பற்ற சமூகநீதியா? என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி ஒன்று திமுக, இன்னொன்று தவெக என சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு  ஜோஸப் விஜய் அவர்கள் சொன்னது. சனாதனத்தை அழிக்க முயற்சிப்பதில் திமுக, தவெக இரண்டில் எந்த கட்சி தீவிரமாக செயல்படுகிறது என்பதில் இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டியைத்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜக சொன்னால் அது மதவாதம்? சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவும், தவெகவும் சொன்னால் அது மதசார்பற்ற சமூகநீதியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

மேலும், ‘தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை ஜோஸப் விஜய் துவங்கிய போது மதசார்பற்ற சமூகநீதியே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாக இருக்கும் என்று அறிவித்தார். தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பதவி ஏற்ற போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற தருணத்தில் தனது உரையின் நிறைவில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

 

அப்போது சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர், தமிழக முதல்வர் ஜோஸப் விஜய் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர்.முஸ்தபா என்பவர் தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்றுள்ளார். அவர் நாங்களும் பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவராக வைத்துள்ளோம். எனவே நாங்களும் சனாதனத்தை ஒழிக்கவே களத்தில் இறங்கியுள்ளோம் என பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார். அவர் அப்படி பேசிய காணொளி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியாக வெளிவந்து இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது கட்சியை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இந்த மண்ணின் தர்மத்தை, பெரும்பான்மை சமுதாயத்தின் வாழ்வியல் தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கு தமிழக முதல்வர் ஜோஸப் விஜய் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். மேலும், முஸ்தபாவையும் அவரது தவறான பொறுப்பற்ற பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க அறிவுறுத்தி இருக்க வேண்டும். அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தமிழக முதல்வர் ஜோஸப் விஜய் அமைதியாக இருப்பதன் மூலம் முஸ்தபாவின் பேச்சை அவரும் ஆதரிக்கிறாரோ? தவெகவின் உண்மையான நோக்கம் திமுக போலவே சனாதனத்திற்கு எதிரானது தானோ என்கிற சந்தேகமும் அதுதான் உண்மையும் கூட என்பதையும் உறுதி செய்கிறது.

ஆக, மதசார்பற்ற சமூகநீதி என தவெகவை தொடங்கிய போது ஜோஸப் விஜய் சொன்னதெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்காக  முன்வைத்த வார்த்தை ஜாலங்கள் என்பது நிரூபணமாகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஆயிரம் ஆண்டுகள் அந்நிய படையெடுப்பின் போதும், அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் போதும்  எவராலும் அழிக்க முடியாத சனாதன தர்மத்தை நாங்கள் அழிப்போம் என்று திமுக வழியில் தவெக கூறுவது ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.

பிரபஞ்சமும், பஞ்ச பூதங்களும் இருக்கும் வரை சனாதன தர்மம் இருந்துகொண்டே இருக்கும். இயற்கையும், இந்து மதமும் ஒன்றோடொன்று இணைந்தே இருக்கும். கட்சிகள் வந்து கொண்டே இருக்கும். ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் என்றும் மாறாதது...என்றும் அழிவில்லாதது... சனாதன தர்மம் மட்டும்..!! சனாதனமே பாரதத்தின் உயிர்..!! சனாதனமே பாரதத்தின் ஆன்மா’ என்று கூறியுள்ளார்.