கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த 3 வயது சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்ச ரூபாய் நிவாரண நிதியை செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் குமார் மற்றும் ஆட்சியர் கவிதா ஆகியோர் வழங்கினர். அப்போது முதல்வர் விஜய் வருத்தப்பட்டதாகவும், இது போன்று யாருக்கும் நடக்ககூடாது என கூறியதாகவும் அமைச்சர் குமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 14-ஆம் தேதி இரவு 3 வயது வடமாநில பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது. இது தொடர்பாக பீகாரை சேர்ந்த என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நேற்று முழுவதும் போராட்டங்களை நடத்தினர். பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பூந்தமல்லியில் உள்ள திருவள்ளூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியின் இல்லத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் அரசு நிவாரண நிதியாக 8 லட்ச ரூபாய்க்கான காசோலையை செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆகியோர் வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் குமார், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் விஜய் வருத்தப்பட்டதாகவும், இது போன்று யாருக்கும் நடக்ககூடாது என கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
