காலநிலை மாற்றம் குறித்து காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு ( The Intergovernmental Panel on Climate Change ) சில ஆய்வறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கைகள் மூலம் தமிழ்நாட்டிற்கு சொல்லும் எச்சரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கால நிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் தீவுகளாக மாறும் என்றும், தமிழ்நாடு வெள்ளம், வறட்சி போன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்திக்கும் என ஆய்வறிக்கை குறிப்பிட்டிருந்தது.




இது தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ''காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடிய உலகளவிலான 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் இருக்கும் சென்னை அடுத்த 30, 40ஆண்டுகளில் குட்டித் தீவுகளாக மாறலாம் என்றார்.கூட்டத்தில் பேசிய பலரும் தங்களது கருத்துகளை அழுத்தமாக முன்வைத்தனர். 






பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், கனிமொழி, ,அமைச்சர் சிவசங்கர்.  சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிவாஹிருல்லா, வேல்முருகன், எழிலன், வெங்கடேஷ்வரன், அருள், ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைச்செல்வன், சதன் திருமைலைக்குமார், ரகுராமன், திருமகன் ஈ வெ ரா ஆகியோரும் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்,
நர்த்தகி நடராஜன் விஜயபாஸ்கரன், சீனிவாசன், சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.