பணம் தராததால் தீ வைத்து எரிப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது 65 ) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி ( வயது 60 ) இவர்களுக்கு மேனகா ( வயது 38 ) , மௌனிகா ( வயது 25 ) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

Continues below advertisement

இதனால் செல்வராஜிக்கும் , விஜயலெட்சுமிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து கடந்த 12 - ம் தேதி இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர விஜயலெட்சுமி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் 13 ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

Continues below advertisement

மேனகா திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். மௌனிகாவுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த விஜயலெட்சுமி , மேனகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மௌனிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை நகர போலீசார் செல்வராஜ் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் 14 மணி நேரத்தில் குழந்தையை கொலை செய்த பாட்டி

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி , தன்னுடைய 2-வது பிரசவத்திற்காகத் தனது தாயின் ஊரான பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குக் கடந்த 18-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில் , பிறந்த 14 மணி நேரத்திலேயே அந்தப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, குழந்தை இறந்தது குறித்துப் பிரியதர்ஷினி பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில், அந்தப் பிஞ்சு குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பவத்தன்று குழந்தையுடன் இருந்த பிரியதர்ஷினியின் தாயார் தங்கமணியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மகளுக்கு இரண்டாவது முறையாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதாலும், ஏற்கனவே அவளுடைய கணவர் குடிப் பழக்கத்தின் காரணமாக குடும்பத்தைக் கவனிக்காமல் பொறுப்பின்றி இருந்து வருவதாலும் , 2 - வது பெண் குழந்தையையும் வளர்ப்பதற்குப் பிரியதர்ஷினி மிகவும் சிரமப்படுவார் என்ற சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.

இதன் காரணமாகவே தானே அந்தக் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகத் தங்கமணி வாக்கு மூலம் அளித்தார். இதனையடுத்து, பவானி காவல் துறையினர் தங்கமணியைக் கொலை வழக்கில் தற்போது கைது செய்துள்ளனர்.