சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசின் மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
தேசிய கீதம் விவகாரம்:
இந்த நிலையில், முதலமைச்சரின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் தரப்பில் மீண்டும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்து ஆளுநர் மாளிக்கை வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில், பேரவை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும், மாநில சட்டப்பேரவைகளில் அவ்வாறுதான் பாடப்படுகிறது என்று ஆளுநர் சபாநாயகரையும் முதலமைச்சரையும் வலியுறுத்தி உள்ளார். ஆனால், அது மரபு அல்ல என்றும் தேசிய கீதம் இறுதியில் இசைக்கப்படும் என்றும் சபாநாயகர் மறுத்தார்.
இதனை ஏற்காத ஆளுநர் ரவி, பேரவையில் தன்னுடைய உரையையும் வாசிக்காமல் அவசர அவசரமாக பேரவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு அரசின் அரசு நிகழ்ச்சிகளில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடப்படுவது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Erode East Bypoll: பயம்..! திமுக+ மீதா? தோல்வி மீதா? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், யாருக்கு லாபம்?