பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறி 10 நாள்கள் கூட ஆகாத நிலையில், தற்போது, அதற்கு நேர்மாறான கருத்துகளை அவர் கூறி இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர்கள் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியுள்ளார்.


"தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை"


அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 21ஆம் தேதி, பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆளுநர் புகழ்ந்து பேசியிருந்தார்.


தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர் என ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.


இதையும் படிக்க: Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன? அறிந்துகொள்ள வேண்டிய நிபந்தனைகள், ஆட்சேபனைகள்


இந்த நிலையில், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர்கள் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியுள்ளார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைப்பதாக, மாணவிகள் தம்மிடம் கூறுகின்றனர் என அவர் பேசியுள்ளார்.


மாத்தி மாத்தி பேசும் ஆளுநர்:


தமிழ்நாடு அரசுடன் தொடர் போக்கில் இருந்து வரும் ஆளுநர் ரவி, ஒரு வாரத்திற்கு முன்பு, திடீரென தமிழ்நாட்டை புகழ்ந்து பேசியது அரசியல் கணக்காக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பியது. இம்மாதிரியான சூழலில், பத்தே நாள்களில் தான் பேசிய கருத்துக்கு நேர்மாறான கருத்துகளை அவர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தமிழ்நாடு ஆளுநராக ரவி பதவியேற்றதில் இருந்து, அவர் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திருவள்ளுவர், சாதி, மகாத்மா காந்தி, வள்ளலார் என பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய கருத்துகளுக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்